மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பை இம்மாதம் வெளியாக உள்ள நிலையில் பல கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் எந்த கட்சி யாருடன் கூட்டணி வைத்துக் கொள்ளப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள மக்களும் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மக்களவைத் தேர்தல் குறித்து பகிர்ந்துள்ளார். அதாவது இன்று மதியம் ஒரு மணிக்கு அண்ணா அறிவாலயம் வந்த கமல் முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பில் 2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்குவதாக முடிவு செய்யப்பட்ட நிலையில் இருவரும் அந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். இந்த சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் கூறியதாவது, இந்த பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை. எங்களது கட்சி சார்பிலும் யாரும் போட்டியிடவில்லை. நாங்கள் இந்த தேர்தலில் திமுக அணிக்கு முழு ஒத்துழைப்பு தர இருக்கிறோம் மேலும் பிரச்சாரமும் மேற்கொள்ள இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.