கொரோனா பரவல் அச்சம் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் மாணவர்களின் அரையாண்டு தேர்வுகளையும் ரத்து செய்ய தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பண்டிகை காலங்களும் துவங்கவுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
கொரோனா பரவல் அச்சம்:
கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் பல வித தளர்வுகளுடன் பின்பற்றப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக தற்போது வரை தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அரசு சார்பில் வெளியிடப்படவில்லை. மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பே பள்ளிகள் திறக்கப்படலாம் என்றும் அந்தந்த மாநிலங்களில் இருக்கும் சூழ்நிலைகளை பொறுத்து பள்ளிகள் திறப்பு குறித்து மேற்கொண்டு யோசிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!
கொரோனா பரவல் அச்சம் காரணமாக பள்ளிகள் திறக்க அரசு அனுமதி அளிக்கவில்லை. இப்படியான நிலையில் மாணவர்களின் நலன் கருதி அவர்கள் ஆன்லைன் மூலமாக பாடங்களை கற்றுக் கொள்ளலாம் என்று அரசு சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் கூறப்பட்டது. இதன் காரணமாக, மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் வாயிலாக தான் பாடங்களை கற்று வருகின்றனர்.
அரையாண்டு தேர்வுகள் ரத்து:
பாடங்களை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், பாடத்திட்டங்களை குறைக்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நேற்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. பொதுத் தேர்வுகளை எழுதக் கூடிய மாணவர்களுக்கு பாடங்களை சரியான நேரத்தில் முடித்தால் தான் அவர்களால் தேர்வினை எழுத முடியும். அதேபோல் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்றது. பண்டிகை காலங்களான நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு பாடங்களை முடிக்க இயலாத காரணத்தாலும், கொரோனா பரவல் அச்சம் காரணமாகவும் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்ய அரசு முடிவு எடுத்துள்ளதாகவும் அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது இப்படி இருக்க பள்ளிகள் திறப்பு எப்போது? என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அரசு அடுத்த மாதம் 11ஆம் தேதி பதில் அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.