மத்திய அரசு நடத்திய சமீபத்திய ஆய்வின் அடிப்படியில் தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவல் மே 29 – 31 ஆம் தேதிகளில் உச்சத்தை தொடும் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது சில மாநிலங்களில் குறைவாக பதிவானாலும் இமாசலபிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழல் நிலவுகிறது. ஒடிசா மாநிலம் கடந்த 16-17 ஆம் தேதிகளில் உச்சத்தை தாண்டியும் பதிவாகி உள்ளது. இமாசலபிரதேசத்தில் மே 24-ந்தேதியும், பஞ்சாபில் மே 22 ஆம் தேதியும் பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தை தொடக்கூடும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
தற்போது சூத்ரா என்ற கணிதவியல் கோட்பாடு அடிப்படையில் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தமிழகத்தில் மே 29 – 31 ஆம் தேதிகளில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை உச்சத்தை தொடும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த இரு வாரங்களில் தமிழகம், அசாம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கொரோனா நோய்தொற்று உச்சத்தை எட்டலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூத்ரா மாதிரியை உருவாக்கியவர்களில் ஒருவரான ஹைதராபாத் ஐஐடி பேராசிரியர் வித்யாசாகர் இதை தெரிவித்து உள்ளார்.
நேற்று வரை தமிழகத்தில் ஒரே நாளில் 33,000 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே இந்த தொற்றால் அவதிப்படும் மக்கள் தற்போது மத்திய அரசு வெளியிட்ட இந்த தகவல்களை கேட்டு அச்சத்தில் உள்ளனர். அதே சமயம் இந்த மாதிரிக்கு கடுமையான விமர்சனங்களும் எழுந்த வண்ணம் உள்ளன.