உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்ட அதீத பாதிப்புகள் அடுத்த 10 ஆண்டிற்கு நீடிக்கும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் வேதனை தெரிவித்து உள்ளார். இது குறித்து ஜெனிவாவில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
கொரோனா பாதிப்பு:
கடந்த வருடம் டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கிய கொரோனா பாதிப்பு உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் தீவிரமாக பரவியது. கொரோனா பரவல் குறித்த உண்மைத்தன்மையை மறைத்ததாக சீனா மீது பல்வேறு நாடுகள் குற்றம் சாட்டி உள்ளனர். இது குறித்து விசாரணைக் குழுவும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா குறித்து சீனாவிற்கு சாதகமாக உலக சுகாதார அமைப்பு செயல்பட்டதாக குற்றம் சாட்டிய டிரம்ப், அமெரிக்கா அந்த அமைப்பில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார்.
இந்நிலையில் உலகம் முழுவதும் இதுவரை 1.84 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 6.96 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர். உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் தலைமையில் ஜெனிவாவில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கொரோனா பாதிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் உரை நிகழ்த்திய டெட்ரோஸ், கொரோனாவிற்கான தடுப்பு மருந்து மிக விரைவாக கண்டுபிடிக்கப்பட்டாலும் அது அனைவரிடமும் சென்றடைய நீண்ட காலம் பிடிக்கும் என தெரிவித்து உள்ளார்.
மேலும் இது குறித்து அறிவியல் பூர்வ கேள்விகளுக்கு தற்போது விடையில்லை என கூறிய டெட்ரோஸ், நூற்றாண்டில் ஒரு முறை வரும் இது போன்ற தொற்று நோய் ஏற்படுத்தும் பாதிப்பு பத்து ஆண்டுகள் நீடிக்கும் என கவலை தெரிவித்து உள்ளார். அதுவரை மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வைரஸை எதிர்த்து போராட வேண்டும் என கூறியுள்ளார்.