கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு இருந்த கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்பட்டு உள்ளதால் மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் இளநிலை 3ம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளன.
கல்லூரிகள் திறப்பு:
தமிழகத்தில் இதுவரை 790,240 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து உள்ளனர். இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஆன்லைன் & தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டது. மேலும் பள்ளி மாணவர்களின் பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் தவிர்த்து பிற மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதற்கிடையில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் பள்ளி, கல்லூரிகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கி, அந்தந்த மாநிலங்கள் தன்னிச்சையாக முடிவெடுத்துக் கொள்ளுமாறு தெரிவித்தது. இதனால் ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டது. இருப்பினும் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலம் கருதி கடந்த டிசம்பர் 2ம் தேதி முதல் முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன.
இன்று முதல் (டிசம்பர் 7) இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகளை திறந்து வகுப்புகளை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் கிருமிநாசினி, முகக்கவசம் உள்ளிட்ட சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள்ள மாணவர்களுக்கு அனுமதியில்லை, ஒரு விடுதி அறையில் ஒரு மாணவர்க்கு மட்டுமே அனுமதி உள்ளிட்ட விதிகளை பின்பற்ற வேண்டும்.
அதுமட்டுமின்றி மாணவர்களை கல்லூரிக்கு நேரில் வர நிர்பந்திக்க கூடாது எனவும், பெற்றோர்களின் அனுமதியுடன் வருமாறும் கூறப்பட்டு உள்ளது. நேரில் வர முடியாத மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகளை தொடரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளதை தொடர்ந்து மாணவர்கள் உற்சாகத்துடன் வகுப்புகளுக்கு செல்வதை கண்கூடாக பார்க்க முடிகிறது.
…