அண்மை காலமாக, தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்குச் சத்துக் குறைபாடு அதிகரித்து வருவதாக தகவல் வெளியானது. அதை தடுக்க தமிழக அரசு தற்போது “காலை சிற்றுண்டி” திட்டத்தை தொடங்கி உள்ளது.
காலை சிற்றுண்டித் திட்டம்:
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஊட்டச்சத்துக் குறைபாட்டை போக்கவும், இடைநிற்றலை தவிர்க்கும் வகையிலும் “இலவச மதிய உணவு திட்டம்” செயல்பாட்டில் உள்ளது. இதை தொடர்ந்து அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்க, “காலை சிற்றுண்டி” திட்டத்தை சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.
மேலும் இந்த காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த செப்.,15 அன்று மதுரையில் தொடங்கி வைத்தார். பின் முதல்வர் மாணவர்கள் உடன் இணைந்து உணவு சாப்பிட்டு, மாணவர்களுக்கும் உணவை வழங்கினார். இதையடுத்து பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும், காலை சிற்றுண்டிகான மெனுவையும் அரசு வெளியிட்டு உள்ளது. இந்நிலையில் தலைமை செயலகத்தில் இன்று காலை உணவு திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வுக்கூட்டம் மேற்கொண்டார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாணவர்களுக்கு பள்ளி நாட்களில் காலை உணவு வழங்கப்படும் விவரங்கள் குறித்து திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகராட்சி மாதிரி தொடக்கப் பள்ளியின் காலை உணவு வழங்கும் பொறுப்பாளர் மணிமேகலையிடம் போன் மூலம் முதலமைச்சர் கேட்டறிந்தார். அதாவது “பள்ளிகளுக்கு காலையில் உணவு சரியான நேரத்திற்கு வருகிறதா, மாணவர்கள் உணவை சரியாக சாப்பிடுகிறார்களா” என்று அக்கறையுடன் விசாரித்தார்.