தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 5,583 பள்ளி கட்டிடங்கள் இடிந்து விழும் மோசமான நிலையில் உள்ளதாக ஐகோர்ட் மதுரை கிளையிடம், அரசு தகவல் தெரிவித்துள்ளது.
பள்ளிக் கட்டிடங்கள்:
தமிழகத்தில் நெல்லை, சென்னை, மதுரை, கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய பள்ளி கட்டிடங்கள் அதிகளவில் உள்ளன. இதில் பெரும்பாலான கட்டிடங்கள், மேற்கூரைகள் இடிந்து விழும் மோசமான நிலையில் உள்ளது. சமீபத்தில் மதுரை கொடி மங்கலத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அந்த நேரத்தில் அந்த பள்ளியில் மாணவர்கள் யாரும் இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து மதுரையை சேர்ந்த சமூக நல ஆர்வலர் செந்தில் முருகன் என்பவர் ஐகோர்ட்டு மதுரைக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியது, தமிழகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள அரசுப் பள்ளிகள், அங்கன்வாடி கட்டிடங்களை ஆய்வு செய்து, மோசமான கட்டிடங்களை அகற்றி புதிய கட்டிடம் அமைக்க குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு இன்று வந்தது. அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 2021-2022 ஆண்டு 2,553 சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டது. மேலும் தற்போது 2022-2023 ஆண்டுக்கான 3030 சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்படவுள்ளது. இருப்பினும் தற்போது தமிழகத்தில் 5,583 பள்ளி கட்டிடங்கள் மோசமான நிலையில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், தமிழகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடம் கட்ட குழு அமைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.