அமெரிக்கா – ஈரான் இடையிலான போர்பதற்றம் நீண்ட நாட்களாக நிலவி வருகிறது. அமெரிக்கா படையினரால் ஈரான் ராணுவ தளபதி கொல்லப்பட்டதால், ஈரான் அமெரிக்கா ராணுவ மையங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் ஈரான் நாட்டின் தெஹ்ரானில் உள்ள இமாம் கொமையினி விமான நிலையத்திலிருந்து சுமார் 170 பயணிகளுடன் டேக்-ஆஃப் ஆன உக்ரைன் நாட்டு விமானம், விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 176 பேர் பலியாகினர்.
தொழில்நுட்ப கோளாறா??
இந்நிலையில் இந்த விபத்தானது தொழில்நுட்ப கோளாறினால் நடைபெற்றதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதில் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் விபத்தில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்தனர். ஆனால் ஈரான் அரசானது அதனை ஒப்புக்கொள்ளவில்லை, தொழில்நுட்ப கோளாறினால் நடைபெற்றதாகவே தெரிவித்து வந்தது.
தவறுதலாக சுட்டோம்
இந்நிலையில் இன்று ஈரான் அரசு ஊடகங்களில் வெளியான செய்திகளில் விபத்துக்குள்ளான உக்ரைன் விமானத்தை நாங்கள் தான் தவறுதலாக சுட்டு வீழ்த்தி விட்டோம் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது. மேலும் இது மனித தவறினால் நடந்து விட்டதாகவும், இதற்காக உயிர் இழந்தோரின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இது குறித்த அனைத்து விசாரணைக்கும் ஈரான் அரசு ஒத்துழைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் விமானத்தை ஈரான் அரசு சுட்டு வீழ்த்தி 176 பேரை தவறுதலாக கொன்று விட்டதாக தெரிவித்துள்ளது உலகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.