பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பலரும் குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, “டெல்லி சலோ” போராட்டத்தை அண்மைக்காலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் விவசாய சங்கத்துடன், மத்திய அமைச்சர்கள் நடத்திய 4 ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது. இதனால் நேற்று (பிப்.21) மீண்டும் டெல்லி நோக்கி புறப்பட்ட போராட்டக்காரர்கள் மீது, போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசியதோடு ரப்பர் குண்டுகளால் துப்பாக்கி சூடு நடத்தினர்.
அதில் பஞ்சாப் விவசாயி (24 வயது) ஒருவர் உயிரிழந்ததோடு 160 பேர் படுகாயமடைந்தனர். இதனால் டெல்லி சலோ போராட்டம் 2 நாள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக விவசாய சங்கத் தலைவர் சர்வன் சிங் பாந்தேர் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து 5ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கை குறித்து விவாதிக்க தயாராக இருப்பதாக ஒன்றிய வேளாண் அமைச்சர் அர்ஜுன் முண்டா அறிவித்துள்ளார்.