தமிழக மட்டுமல்லாமல் மற்ற பிற மாநிலங்களிலும் இப்போது 10, 11, 12 வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் 5, 8, 9 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த அம்மாநில அரசு தீவிரம் காட்டி வந்தது. ஆனால் இதற்கு தனியார் பள்ளி கூட்டமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பின் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் பொதுத்தேர்வு நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் கர்நாடகா மாநில அரசு மேல்முறையீடு செய்ததில் பொதுத் தேர்வு நடத்த உரிய அனுமதி கிடைத்தது. இந்நிலையில் நேற்று முதல் 5, 8, 9 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கர்நாடகா உயர்நீதிமன்றம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது இப்போது நடைபெறும் 5, 8, 9 வகுப்புக்கான பொதுத் தேர்வுகளை எந்த விதத்திலும் வாரிய தேர்வாக கருதப்பட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். அதாவது மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்தால் அவர்களை மீண்டும் மறு தேர்வு எழுத வைக்க வேண்டும் மேலும் இந்த தேர்வில் தோல்வி அடைந்ததை காரணமாக வைத்து அடுத்த வகுப்பிற்கு செல்வதை நிறுத்தி வைக்க கூடாது. அது மாணவர்களுக்கு மனதளவில் மட்டுமல்லாமல் எதிர்காலத்திலும் கடுமையான விளைவை ஏற்படுத்தும். மேலும் இந்த தேர்வுக்கான விடைத்தாள்களை வெளிப்புற ஆசிரியர்களை வைத்து மதிப்பிடாமல் உள் ஆசிரியர்களை வைத்து மதிப்பீடு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.