கொரோனாவுக்கு முன், பின் என பலரது வாழ்க்கையை பிரித்து விடலாம். அந்த அளவுக்கு வாழ்க்கை திசை மாறி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கு முடிந்த பின், இந்தியாவில் 55 சதவீத மக்கள் மன நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஐந்து பேரில் ஒருவர்
இந்திய மனநோய் மருத்துவர்கள் சங்கத்தால், மனநோய் தொடர்பான பத்திரிகை வெளியிடப்படுகிறது. மூன்று மாதத்திற்கு ஒரு முறை வெளியாகும் இதில், கொரோனா ஊரடங்கு குறித்த ஆராய்ச்சி முடிவு விவரிக்கப்பட்டுள்ளது. ஐந்து தென் இந்திய மாநிலங்கள் உட்பட மொத்தம் 11 மாநிலங்களில் சர்வே எடுக்கப்பட்டது. இதில், கொரோனா ஊரடங்கு முடிந்த பின், இந்தியாவில் 55 சதவீத மக்கள் மன நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர். இதற்கு, வேலை இழப்பு, தொழிலில் நட்டம், எதிர்காலம் குறித்த பயம் காரணமாக உள்ளன.
இந்த காலகட்டத்தில், வயது வந்தோரில் 5 பேரில் ஒருவர் மன அழுத்ததால் பாதிக்கப்பட்டுள்ளார். இளம் வயதினர், விவாகரத்தான பெண்கள் உள்ளிட்டோர் எதிர்காலம் குறித்த அச்சத்தில் காணப்படுகின்றனர். இப்படி மன நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிச்சயமாக கவுன்சிலிங் தேவை. உடலை நல்ல முறையில் பராமரித்து, கொரோனாவை எதிர்த்து போராட வேண்டும் என்ற நம்பிக்கை மக்களிடம் பிறந்துள்ளது,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.