குளத்தூர் அருகே 25 வயதான கல்லூரி மாணவி 19 வயது மாணவனை காதலித்து வீட்டை விட்டு ஓடியுள்ளார். தற்போது மாணவியை போலீசார் மீட்டதை அடுத்து பையனுக்கு வயது வந்ததும் முறைப்படி திருமணம் செய்து வைப்பதாக பெற்றோர்கள் சமரசம் செய்து வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
காதலர்கள் ஓட்டம்:
தூத்துக்குடிக்கு அருகே உள்ள குளத்தூரை சேர்ந்த 25 வயது மாணவி ராமநாதபுரத்தில் உள்ள கல்லூரியில் படித்து வந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருந்த மாணவிக்கு பக்கத்துக்கு கிராமத்தை சேர்ந்த 19 வயது வாலிபனுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றுள்ளான் அந்த இளைஞன். சின்ன பையன் தானே என்று மாணவியின் பெற்றோர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
உறவினரின் மகன் என்றாலும் வயது வித்தியாசத்தை காட்டி தனது காதலை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நினைத்த காதல் ஜோடி வீட்டை விட்டு ஓடி இன்னொரு உறவினர் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளனர். இதனை அடுத்து போலீசாரிடம் இருவரது பெற்றோர்களும் புகாரளித்துள்ளனர்.
காதலர்களை மீட்ட போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மாணவனுக்கு திருமண வயது வந்ததும் இருவருக்கும் முறைப்படி திருமணம் செய்து வைப்பதாக அவர்களது பெற்றோர்கள் கூறியுள்ளனர். 25 வயது மாணவி காத்திருந்து திருமணம் செய்துகொள்வதாக தெரிவித்தார். பிறகு இருவரையும் பெற்றோர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.