இந்தியாவில் பப்ஜி (PUBG) ஆன்லைன் விளையாட்டை தடை செய்வது குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அமைச்சர் ஆர்பி உதயகுமார் அவர்கள் தெரிவித்து உள்ளார்.
PUBG கேமிற்கு தடை:
இந்திய – சீன எல்லைப் பிரச்சனையில் நடைபெற்ற மோதலை தொடர்ந்து இந்தியாவில் 59 சீன செயலிகள் தடை செய்யப்பட்டன. இதனால் சீன பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடி விழுந்துள்ளது. மேலும் சீன இறக்குமதி, டெண்டர்கள் போன்றவற்றிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளது. இந்நிலையில் இளைஞர்களை வன்முறை எண்ணத்தை ஊக்குவிக்கும் PUBG ஆன்லைன் விளையாட்டையும் தடை செய்யுமாறு பெற்றோர்கள் சார்பில் கோரப்பட்டு உள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானில் இந்த கேமிற்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்று சென்னை திருவிக நகரில் கொரோனா பணியில் ஈடுபட்டு உள்ள தன்னார்வ பணியாளர்களுக்கு முகக்கவசம், கிருமிநாசினி, கபசுர குடிநீர் ஆகியவற்றை வழங்கிய பின்னர் பேட்டி அளித்த அமைச்சர் ஆர்பி உதயகுமார் போலி இ பாஸ் மூலம் பயணம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் தென் மாவட்டங்களில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைத் தடுக்க நடமாடும் காய்ச்சல் முகாம்கள் மற்றும் சோதனைகளை அதிகரிப்பது போன்ற துரித நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறியுள்ளார்.
இந்தியாவில் PUBG ஆன்லைன் விளையாட்டு செயலிக்கு தடை விதிக்கப்படுவது குறித்து கூறிய அமைச்சர், இது குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என தெரிவித்து உள்ளார்.