பிரபல தனியார் தொலைக்காட்சியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ எனும் சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான சித்ரா இன்று அதிகாலை சென்னை நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 28 வயதான அவருக்கு இன்னும் சில மாதங்களில் ஹேமநாத் எனும் தொழிலதிபருடன் திருமணம் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
விஜே ஆக மக்கள் தொலைக்காட்சியில் தனது திரைப்பயணத்தை துவக்கிய சித்ரா, விஜய் டிவியில் நடித்த ‘சரவணன் மீனாட்சி’ எனும் சீரியல் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதன்பின்னர் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் அவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. அதில் முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்த சித்ராவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். சித்ராவின் நடிப்பிற்காகவே அந்த சீரியலை பார்ப்பவர்கள் பலர்.
சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் நேற்று நள்ளிரவு 2.30 மணி அளவில் சூட்டிங்கை முடித்து விட்டு நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலுக்கு வந்துள்ளார். அங்கு தனது வருங்கால கணவர் ஹேமநாத் அவர்களுடன் இருந்த சித்ரா குளிக்கச் செல்வதாக கூறி, அவரை வெளியே அனுப்பி இருக்கிறார். நீண்ட நேரமாக கதவை தட்டியும் சித்ரா கதவை திறக்காததால், ஹோட்டல் ஊழியரிடம் மாற்று சாவியை கொண்டு வரச்செய்து கதவை திறந்துள்ளனர்.
அப்போது சித்ரா அறையின் மின் விசிறியில் புடவையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். சித்ராவின் தற்கொலை சம்பவம் சின்னத்திரையில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.