ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில், வெவ்வேறு இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இவர்களின் திடீர் துப்பாக்கிச்சூட்டில் பலர் காயம் அடைந்தனர். இரண்டு பேர் உயிர் இழந்துள்ளனர்.
ஆறு இடங்கள்
மத்திய ஐரோப்பியா நாடு ஆஸ்திரியா. கொரோனா மீண்டும் பரவ தொடங்கியதால், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தலைநகர் வியன்னாவில் 2ம் தேதி இரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்நகரின், மையப்பகுதியில் தேவாலயம் அமைந்துள்ள பகுதி உள்ளிட்ட ஆறு இடங்களில் துப்பாக்கியுடன் தாக்கினர். துப்பாக்கிச்சூட்டில் பலர் காயம் அடைந்தனர். இரண்டு பேர் உயிர் இழந்துள்ளனர். போலீசார் தாக்குதலில், ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். இன்னும் ஒரு பயங்கரவாதியை போலீசார் தேடி வருகின்றனர்.
துப்பாக்கி சுடும் சத்தம்
இது குறித்து ஆஸ்திரியா சான்சிலர் செபாஸ்டியன் கூறுகையில்,’ வெறுப்பூட்டும் தாக்குதலை பயங்கரவாதிகள் நிகழ்த்தி உள்ளனர்,’ என வேதனை தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதிகள் தாக்குதலை நேரில் பார்த்த கிறிஸ் ஜயோ கூறுகையில்,’ திடீரென 20 முறை துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. இதன் பின், ஆம்புலன்ஸ் அடுத்தடுத்து வந்தது. தெருவில் துப்பாக்கி சூட்டில் பலர் காயம் அடைந்து கிடந்தனர்,’ என்றார்.
பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.