கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டிய சுழ்நிலை ஏற்பட்டது. இதனால் வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்ட நிலையில் தற்போது ஊரடங்கு தளர்விற்கு பிறகு வேலையில்லாத் திண்டாட்டம் குறைந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
ஊரடங்கு
இந்தியாவில் நீண்ட காலமாகவே வேலையில்லாத் திண்டாட்டம் பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப நாட்டில் போதிய அளவு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதில்லை எனவும், உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை எனவும் குற்றச்சாட்டு இருக்கிறது.
இதனை தொடர்ந்து கொரோனா பாதிப்பால் வேலையில்லாத் திண்டாட்டம் மேலும் அதிகரித்தது. கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தொழில் துறை முடங்கி வேலை இல்லாமல் மக்கள் அனைவரும் வீடுகளுக்கு உள்ளேயே இருக்கும் சூழல் உருவானது. ஊழியர்கள் பலர் பணிநீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு தளர்வு
இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால் வேலையில்லாத் திண்டாட்டம் குறைந்துள்ளதாக இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் 23.5 சதவீதமாக இருந்த இந்தியாவின் வேலையின்மை விகிதம் ஜூன் முதல் வாரத்தில் 17.5 சதவீதமாகக் குறைந்தது. பின்னர் ஜூன் இரண்டாம் வாரத்தில் அது மேலும் குறைந்து 11.6 சதவீதத்துக்கு வந்துள்ளது. ஜூன்14ஆம் தேதி நிறைவடைந்த வாரத்தில் தொழிலாளர்கள் பங்கேற்பு விகிதம் 40.4 சதவீதமாக இருந்துள்ளது. இந்த விகிதம் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முன்னர் மார்ச் 22ஆம் தேதி நிறைவடைந்த வாரத்தில் 42.6 சதவீதமாக இருந்தது.
ஊரடங்கு அறிவிக்கப்பட்ட முதல் வாரத்தில் 39.2 சதவீதமாகவும், இரண்டாம் வாரத்தில் 36.1 சதவீதமாகவும் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் குறைந்துபோனது. ஏப்ரல் 26ஆம் தேதி மிக மோசமாக 35.4 சதவீதமாகக் குறைந்தது. எனினும் ஏப்ரல் மாத இறுதி முதல் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து ஜூன் 14ஆம் தேதி 42.7 சதவீதத்துக்கு வந்துள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருவதால் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் அதிகரித்து வேலையின்மை விகிதம் குறைந்து வருவதாக இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயலதிகாரியுமான மகேஷ் வியாஸ் தெரிவித்துள்ளார்.