மத்திய அரசால் பெண் குழந்தைகளின் நலனுக்காவும், அவர்களது வருங்கால தேவைக்காகவும் சுகன்யா சம்ரிதி யோஜனா என்னும் சேமிப்பு திட்டம் 2015ம் ஆண்டு துவங்கப்பட்டது. இது தமிழகத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டம் என்றழைக்கப்படுகிறது.
சேமிப்பு திட்டத்தின் தகுதிகள்:
- இந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இணைய விரும்பும் நபர்கள் 10 வயதுக்கு கீழுள்ள பெண் குழந்தையாக இருக்க வேண்டும். பெண் குழந்தைகளின் பெயரில் அவர்களது பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் தபால் நிலையங்களில் அல்லது வங்கிகளில் கணக்கு துவங்கி இருக்க வேண்டும்.
- இதில் இணைய பெண் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் அவசியமானது ஆகும்.
- மேலும் இத்திட்டத்தின் பயனை ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண் குழந்தைகளால் மட்டுமே பெற இயலும்.
சேமிப்பின் கால அளவு:
இச்செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இணையும் நபர்கள் ஒரு ஆண்டுக்கு ரூ.250/- முதல் ரூ.1,50,000/- வரை வைப்பு தொகையாக செலுத்தலாம். இத்திட்டத்தின் கால அளவு 21 ஆண்டுகள் ஆகும். பயனர்கள் 18 வயதை பூர்த்தி அடைந்த பின் சேமிப்பில் 50% பணத்தை உயர் கல்வி மற்றும் திருமணத்திற்காக எடுத்துக் கொள்ளலாம். முழு பணத்தையும் திட்டத்தில் இணைந்து 21 ஆண்டுகள் நிறைவு பெற்ற பிறகே பெற இயலும்.
மத்திய அரசின் அறிவிப்பு:
இத்திட்டத்தில் சேமிக்கப்படும் வைப்பு தொகைக்கு மத்திய அரசானது ஆண்டு ஒரு முறை வட்டி செலுத்தி வருகிறது. இவ்வடியின் அளவையும் மத்திய அரசு தான் நிர்ணயம் செய்கிறது. இந்த வட்டியின் விகிதத்தை வழங்கமாக ஒவ்வொரு நிதியாண்டுக்கும் ஒரு முறை மத்திய அரசானது மாற்றிக் கொண்டே இருக்கும். இந்த வகையில் நடப்பு நிதியாண்டு துவங்கப்பட்டதை தொடர்ந்து ஏப்ரல் – ஜூன் வரையிலான காலத்திற்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 8.2% வட்டியை நீட்டிக்க உள்ளதாக மத்திய அரசானது அறிவித்துள்ளது. இதனால் பெண் குழந்தைகள் உள்ள பெற்றோர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.