தமிழ்நாட்டில் அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப TNPSC தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் குரூப் 4க்கான எழுத்துத் தேர்வினை தேர்வாணையம் நடத்தியது. இதில் தேர்வு எழுதிய சுமார் 18 லட்சத்துக்கும் மேலானோர்கள் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் பல மாதங்களுக்கு பிறகு கடந்த மார்ச் 24ம் தேதி தான் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
தேர்வாணையத்தின் இந்த கால தாமதத்திற்கு ஏதேனும் முறைகேடு காரணமாக இருக்குமோ என பலரும் யூகித்து வந்தனர். இந்நிலையில் அடுத்தடுத்த பதிவெண்களை கொண்டு தேர்ச்சி பெற்ற சுமார் 2,000 பேர் தென்காசியில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றதாக தெரிய வந்தது. இதேபோல் காரைக்குடி மையத்தை சேர்ந்த சுமார் 700 பேரும் ஒரு சேர தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து கடும் அதிருப்தி அடைந்த தேர்வர்கள் பலரும் இது குறித்த புகார்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சட்டப்பேரவையில் நடைபெற்ற கூட்டத்தொடரிலும் TNPSC குரூப் 4 தேர்வு முறைகேடு குறித்து நடவடிக்கை மேற்கொள்ள அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும் அரங்கேற்றினர்.
இதையடுத்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள TNPSC தேர்வாணைய தலைவர் முனியநாதனிடம் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவுறுத்தி இருந்தார். இதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை பாரிமுனை அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது. இதில் TNPSC தலைவர் முனியநாதன் தலைமையில் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். இதன் முடிவில் முறைகேடு நடவடிக்கை குறித்த முக்கிய தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.