தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் அரசு பேருந்தில் மகளிருக்கு இலவச (விடியல் பயணம்) பயணத்தை அரசு அமல்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம், பல லட்சம் மகளிர் பயன் பெற்று வந்த நிலையில், பேருந்து பெண் பயணிகளிடம், திடீரென பெயர், மொபைல் எண், வயது, சாதி என்ற விவரங்களை நடத்துனர்கள் பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சமீபத்தில் குற்றச்சாட்டு தெரிவித்திருந்த நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பதில் அளித்துள்ளார். அதாவது, மகளிற்கு இந்த திட்டம் எந்த அளவிற்கு பலனளிக்கிறது என்பதை ஆராய்ந்து, அதனை இன்னும் கூர்மை படுத்துவதற்காக தான் விவரங்கள் கேட்கப்படுகிறது என்று கூறியுள்ளார். மேலும், ஆய்வின் முடிவில், விடியல் பயணம் மூலமாக சராசரி ஒவ்வொரு மகளிருக்கு ரூ.88, பேருந்து கட்டணமாக செலவிட்டது மிச்சமாகிறது என்று தெரிவித்துள்ளார்.