தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதல்வருடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மின்துறை அமைச்சர் தங்கமணி அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து இந்த பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா தாக்கம்:
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்களும் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை மூன்று அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அரசாங்கம் தமிழகம் முழுவதும் பரிசோதனைகளை துரிதப்படுத்தியது. இதுவரை 15,85,782 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
நேற்று முதல்வர் மற்றும் அவரது அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட அலுவலக பணியாளர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதியாகி உள்ளது. இந்நிலையில் இன்று முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூடி தடுப்புப் பணிகள் குறித்து விவாதிக்க உள்ளது.