மத்திய பிரதேசம் மாநிலம் நிவாரி மாவட்டம் பிருத்விப்பூர் பகுதியில் உள்ளது சேதுபுராபரா. இந்த கிராமத்தை சேர்ந்த ஹரி கிருஷ்ணன். இவரது மூன்று வயது மகன் பிரகால்த் விளையாடி கொண்டிருந்த போது 200 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துவிட்டார். இச்சம்பவம் மீண்டும் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
200அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த பிரகால்த்:
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விராலிமலை பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் சுஜீத் என்பவர் இதேபோல் விளையாடி கொண்டிருந்தபோது தவறி விழுந்துவிட்டார். மீட்பு படையினர் பல முயற்சிகளை செய்தும் பலன் இல்லாமல் போனது. அவரது உடலை மட்டுமே நம்மால் கைப்பற்ற முடிந்தது. நான்கு நாட்களாக போராடியும் நம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டார்.
இன்னும் எத்தனை முறைதான் ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுந்தன என்ற செய்தியை கேட்க போகிறோமோ தெரியவில்லை. இந்தியாவில் பல இடங்களில் இது தொடர் கதையாகவே இருக்கிறது. உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும் என்று அரசை கேட்டுக்கொள்கிறோம்.
நேற்று பிரகாலத் என்பவர் விளையாடி கொண்டிருந்தபோது திறந்த நிலையில் இருந்த 200 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டார். குழந்தையின் அழுகுரலை கேட்டதும், அருகில் இருந்த மக்கள் ஒடி வந்து குழந்தை கிணற்றில் இருப்பதை பார்த்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் தெரிந்த ராணுவ படையினரும் குழந்தை மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நிவாரி மாவட்ட எஸ்பி, அவர்கள் மீட்புக்குழுவால் குழந்தையின் குரலை கேட்க முடிகிறது என்று கூறியுள்ளார். 100 அடிக்கு கீழ் தண்ணீர் இருப்பதாகவும், குழந்தை எத்தனையாவது அடியில் இருக்கிறான் என்பது தெரியவில்லை என்றும் தகவல் வெளியாகிறது. தொடர்ந்து இரண்டு நாட்களாக குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. குழந்தை உயிருடன் மீண்டு வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கடவுளை வேண்டிக்கொண்டிருக்கிறார்கள்.