தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் புதிய கல்விக் கட்டண கொள்கை அமலுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
கல்விக்கட்டணம் உயர்வு:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் 3 மாதத்திற்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. இதனால் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தி வருகின்றன. அரசு சார்பில் கல்வி தொலைக்காட்சி வாயிலாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் வற்புறுத்தி கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பான வழக்கில் இன்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளிக்க உள்ளது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் புதிய கல்வி கட்டண கொள்கை அமலுக்கு வர உள்ளதாகவும், இதனால் 15 சதவீதம் வரை கட்டணம் உயர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு இணையத்தில் தங்களது கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டு உள்ளது. ஏற்கனவே ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்து பொதுமக்கள் வருமானம் இன்றி தவிக்கும் நிலையில் கல்விக்கட்டணம் உயரும் செய்தி பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.