தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 18ம் தேதி தொடங்கவிருப்பதை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுவார் எனவும் 2021ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளுநர் உரை:
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் கூடும் சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் பொங்கல் பண்டிகைக்கு பிறகு 18ம் தேதி நடத்தப்படவிருப்பதாகவும் அன்றைய தினம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுவார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடிக்க வசதியாக சென்னை, சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்திலேயே சட்டபேரவை கூட்டத்தொடரை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரும் இதே கலைவாணர் அரங்கத்தில்தான் நடந்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தமிழகத்தில் வரும் ஏப்ரல்,மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் நடப்பு சட்டபேரவையின் ஆயுட்காலம் வரும் மே மாதம் 24ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. தேர்தல் நெருங்குவதால் ஆளுநரின் உரையில் தமிழக அரசின் புதிய வளர்ச்சி திட்டங்கள், பணிகள், மக்கள் நல திட்ட அறிவிப்புகள் ஆகியன இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கவர்னரின் உரை முடிந்ததும் அன்றைய கூட்டம் ஒத்தி வைக்கப்படும். அதன் பிறகு சபாநாயகர் தனபால் தலைமையில் கூடும் ஆய்வுக்குழு, கலந்து ஆலோசித்து சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்று முடிவு செய்யும்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவிருக்கும் முதல்வர், துணைமுதல்வர், எதிர்க்கட்சி தலைவர்கள், MLA க்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் சட்டப்பேரவை ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனையை முன்கூட்டியே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கவர்னர் உரை நிகழ்த்தி முடிந்ததுமே நிறைவடையும் இக்கூட்டத்தொடர் மறுபடியும் பிப்ரவரி மாத இறுதியில் துவங்கி நடைபெறும் எனவும், அப்போது 2021ம் ஆண்டுக்கான பட்ஜட் தாக்கல் செய்யப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.