எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு கிரேடு முறையில் தேர்ச்சி வழங்கலாமா என்பது குறித்து கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.
கொரோனாவால் தேர்வுகள் ரத்து..!
கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் மாணவர்கள் நலனை கருதியும் ஒத்திவைக்கப்பட்டு இருந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகளையும், பிளஸ்-1 தேர்வின் இறுதிநாள் பொதுத்தேர்வையும் தமிழக அரசு ரத்து செய்தது.
இதையடுத்து, மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 80 சதவீதமும், வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவீதமும் என மதிப்பெண் வழங்க முடிவு செய்து இருப்பதாகவும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.
மதிப்பெண் வழங்குவதில் சிக்கல்..!
இந்த நிலையில் அரசு கேட்கும் விடைத்தாள்கள் இல்லாதது, இந்த 2 தேர்வுகளிலும் மாணவர்கள் குறைவான மதிப்பெண் பெற்றது உள்பட பல்வேறு காரணங்கள் இருப்பதால் காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையில் மதிப்பெண் வழங்குவதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
கிரேடு முறையில் தேர்ச்சி வழங்க ஆலோசனை..!
கல்வித்துறை அதிகாரிகள் இதை கருத்தில்கொண்டு எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு மதிப்பெண்ணுக்கு பதிலாக ஏ, பி, சி என்ற கிரேடு முறையில் தேர்ச்சி வழங்கலாமா ஆலோசித்து வருவதாகவும் தீர்வு வந்த பிறகு பள்ளி கல்வி அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட உள்ளதாகவும் கூறுகின்றனர். பின்னர், அமைச்சர்கள் முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்த பிறகு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.