சாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டைக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் இருந்த சிறப்பு எஸ்ஐ பால்துரை கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு உயிரிழந்தார்.
சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் அரசு அனுமதித்த நேரத்தை விட சிறிது நேரம் கூடுதலாக கடையை திறந்து வைத்திருந்த காரணத்திற்காக ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் கைது செய்யப்பட்டு போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாகி படுகொலை செய்யப்பட்டனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் உட்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்த வழக்கை விசாரித்து வரும் 8 சிபிஐ அதிகாரிகளில் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மதுரை ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டு உள்ளனர். மேலும் வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்ஐ பால்துரைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் விசாரணை அவரிடம் நிறுத்தி வைக்கப்பட்டு மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் 56 வயதான எஸ்ஐ பால்துரை நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். வியாபாரிகள் இரட்டைக்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான எஸ்ஐ உயிரிழந்து இருப்பது வழக்கு விசாரணையை பாதிக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.