திருக்கோயில்கள் சார்பில் தினந்தோறும் ஒரு லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
ஒரு லட்சம் உணவு பொட்டலங்கள்:
முதல் அமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில், திருக்கோயில்கள் சார்பில் தினந்தோறும் ஒரு லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் மக்களுக்கு தேவையான உணவு பொட்டலங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கொரோனா 2அம் அலை பரவல் முடியும் வரை இன்னும் அதிகமாக, அதாவது ஒரு லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும், திருக்கோயில்களுக்கு சொந்தமான மருத்துவமனைகள் மற்றும் சித்த மருத்துவமனைகளில் கபசுர குடிநீர், முகக்கவசம் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு. அதுமட்டும் அல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 3 வேளை இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்றும் அறிவித்துள்ளார்.