தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் குறைவாகவே பெய்துள்ளதாக வானிலை நிபுணர்கள் கூறி வரும் நிலையில், வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறி உள்ளது. இதனால் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ள 7 மாவட்டங்களில் இன்று முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட உள்ளது. மேலும் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.
நிவர் புயல்:
கொரோனா தொற்று ஆபத்தில் இருந்து தமிழகம் இன்னும் மீளாத நிலையில், அடுத்த பேரிடியாக ‘நிவர் புயல்’ உருவாகி உள்ளது. சென்னையில் இருந்து 450 கிமீ தூரத்தில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது வலுப்பெற்று புயலாக மாறி உள்ளது. இது 25ம் தேதி பிற்பகல் சென்னை மாமல்லபுரம், காரைக்கால் இடையே கரையை கடக்கும். அந்த சமயத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு அத்தியாவசிய காரணங்கள் இன்றி வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
நிவர் புயல் உருவான அறிகுறியாக சென்னையின் பல பகுதிகளில் விடிய விடிய மழை பெய்து சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான முகாம்களில் தங்கவைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களும் உணவு பொருட்கள், பேட்டரிகள், மெழுகுவர்த்திகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
நிவர் புயலின் விளைவாக இன்று மதியம் 1 மணிமுதல் அடுத்த உத்தரவு வரும் வரை புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு 7 ஆகிய மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் அத்தியாவசிய காரணங்கள் இன்றி பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. புயல் தாக்கத்தின் போது மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்வாரியம் ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை காப்பீடு செய்து கொள்ளவும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.