ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடரில், ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் இரட்டையர் பிரிவில் ஆடவர் மற்றும் பெண்கள் அணியினரும் காலிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.
ஹைலோ ஓபன் பேட்மிண்டன்:
கடந்த 1ம் தேதி முதல் ஜெர்மனியில் ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி, ஆடவர் இரட்டையர் பிரிவில், இங்கிலாந்தின் சாக் ரஸ் மற்றும் ரோரி ஈஸ்டன் ஜோடியை எதிர்த்து போட்டியிட்டனர். இதில், இந்திய ஜோடி, கடுமையாக போராடி 22-24 என்ற புள்ளி கணக்கில் தனது முதல் செட்டை இழந்தனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதையடுத்து, வேகம் காட்ட தொடங்கிய இந்திய ஜோடி அடுத்த இரு செட்களை 21-15 மற்றும் 21-11 என தொடர்ந்து கைப்பற்றி, காலிறுதிக்கு தகுதி பெற்றனர். இதே போல, பெண்களுக்கான இரட்டையர் பிரிவில், நெதர்லாந்தின் டெபோரா ஜில்லே மற்றும் செரில் சீனென் ஜோடியை எதிர்த்து இந்தியாவின் ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் போட்டியிட்டனர். இதில், தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய இந்திய ஜோடி 21-18, 21-19 என்ற செட் கணக்கில் வென்றது.
ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரான்சின் அர்னாட் மெர்க்கலை எதிர்கொண்டு, 11-21, 21-13 மற்றும் 21-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம், கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஆகியோரும் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர்.