தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் ஊரடங்கை கடுமையாக்க மருத்துவக்குழு பரிந்துரை செய்து இருந்த நிலையில் ஜூன் 19 முதல் அந்த மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது.
முழு ஊரடங்கு:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்ட காரணத்தால் வைரஸ் பாதிப்பும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று நடைபெற்ற அமைச்சரவை மற்றும் மருத்துவக்குழு உடனான ஆலோசனையில் ஊரடங்கை கடுமையாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஜூன் 19ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி இரவு 12 மணிவரை (12 நாட்கள்) முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.
என்னென்ன விதிமுறைகள்:
முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள 4 மாவட்டங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அவை,
- உணவகங்கள் காலை 6 மணிமுதல், இரவு 8 மணிவரை பார்சல் மட்டுமே வழங்க வேண்டும்.
- காய்கறி, மளிகைக்கடைகள் & பெட்ரோல் பங்குகள் காலை 6 மணிமுதல், மதியம் 2 மணிவரை மட்டுமே இயங்க வேண்டும்.
- முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மாவட்டங்களில் டீக்கடைகள் திறக்க அனுமதி கிடையாது.
- ஜூன் 21 மற்றும் ஜூன் 28 ஆகிய 2 ஞாயிற்றுக்கிழமைகளில் எவ்வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.
- மருத்துவமனைகள், பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவை போன்றவை வழக்கம் போல இயங்கும்.
- சரக்கு போக்குவரத்து, அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு எவ்வித தடையும் கிடையாது.
- அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்லும் பொதுமக்கள் 2 கிமீ சுற்றளவுக்குள் உள்ள கடைகளில் வாங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- அவசர மருத்துவத்திற்கு மட்டும் ஆட்டோ மற்றும் டாக்சி சேவைகள் அனுமதிக்கப்படும்.
- ஏடிஎம், வங்கி சேவைகள் மட்டும் போக்குவரத்து வழக்கம் போல செயல்படும் என முதலமைச்சர் அறிவித்து உள்ளார்.
- சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ. 1000 நிவாரணமாக வழங்கப்படும்.
- அரசுத்துறை அலுவலகங்கள் 33 சதவீத பணியாட்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.