எவரெஸ்ட் உள்ளிட்ட சிகரத்தில் ஏறுவதற்கு, சாகச வீரர்களுக்கு மட்டும் நேபாள அரசு அனுமதி அளித்துள்ளது. சுற்றுலாத்துறையினரின் வாழ்வாதாரத்தை எண்ணி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன் அனுமதி அவசியம்
உலகின் மிகப்பெரிய சிகரம் எவரெஸ்ட். நேபாளத்தில் உள்ள, இம்மலையில் சாகச வீரர்கள் பயணம் மேற்கொள்வர். வெளி நாட்டு பயணிகள் மூலம், நேபாள அரசுக்கு அதிக வருமானம் கிடைத்தது. கொரோனா காரணமாக, கடந்த மார்ச் மாதம் மலை ஏற நேபாள அரசு தடை விதித்தது. இதனால், சுற்றுலாத்துறையை நம்பி இருந்த பல லட்சம் பேர் வருமானம் இழந்தனர்.
இதனையடுத்து, ஏழு மாதங்களுக்குப்பின் சாகச வீரர்கள் மட்டும் மலை ஏற நேபாள அரசு அனுமதி அளித்துள்ளது. இது குறித்து நேபாள சுற்றுலாத்துறை வெளியிட்ட அறிக்கையில்,’ எவரெஸ்ட் உள்ளிட்ட சிகரத்தில் ஏற, சாகச வீரர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. இவர்கள், நேபாளம் வருவதற்கு, முன் அனுமதி பெற வேண்டும்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.