அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7 வது ஊதிய குழு பரிந்துரையின் கீழ் ஆண்டுக்கு இரு முறை என ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படியை உயர்த்துவது வழக்கம். இந்த வகையில், ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படியை மத்திய அரசு கடந்த மார்ச் மாதத்தில் அறிவித்த நிலையில், இதன் தொடர்ச்சியாக மற்ற மாநில அரசுகளும் அடுத்தடுத்து அறிவித்தது.
இதையடுத்து, அரசு ஊழியர்கள் மிகவும் எதிர்பார்த்த ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வை மத்திய அரசானது கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி அறிவித்தது. இதனை தொடர்ந்து, ஒடிசா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநில அரசுகளும், அகவிலைப்படியை அதிகபட்சம் 42% சதவீதத்திலிருந்து 4% அதிகரித்து 46%-மாக அடுத்தடுத்து உயர்த்துவதாக அறிவித்தன. தீபாவளியையொட்டி இந்த அகவிலைப்படியை உயர்த்தி அரசு அறிவித்துள்ளதால், அரசு ஊழியர்களுக்கு இது தீபாவளி பரிசாக மாறியுள்ளது.