சென்னையில் உள்ள 7 ஸ்டார் ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி பலியான நிலையில், 21 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வந்துள்ளது.
காவு வாங்கிய பிரியாணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் அண்ணா சாலை பகுதியில் செவன் ஸ்டார் பிரியாணி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையை காதர் பாஷா என்பவர் நடத்தி வருகிறார். இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு இங்கு தந்தூரி பிரியாணி சாப்பிட்ட 7 பேருக்கு வெள்ளிக்கிழமை காலை, தீராத வயிற்றுப்போக்கு வாந்தி ஏற்பட்டதாக கூறி ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில், இந்த கடையில் பிரியாணி சாப்பிட்ட ஆரணி லட்சுமி நகர் பகுதியை சார்ந்த ஒரு குடும்பமும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
இந்த குடும்பத்தை சேர்ந்த 10 வயது சிறுமி லோசனா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் மேலும் 11 பேர் இங்கு பிரியாணி சாப்பிட்டதாக கூறி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து, கிட்டத்தட்ட 21 பேர் இந்த பிரியாணியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவியது. நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், ஆரணி கோட்டாட்சியர் கவிதா, மற்றும் போலீஸ் டி.எஸ்.பி கோடீஸ்வரன் உள்ளிட்டோர், பாதிக்கப்பட்டவர்களிடம் நேரடியாக சென்று விசாரணை நடத்தினர்.
இது மட்டுமல்லாமல், 7 ஸ்டார் பிரியாணி ஹோட்டலில் ஆய்வு நடத்தி, கெட்டுப்போன சிக்கன் சமைக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் பொருள் கலக்கப்பட்டதா? என்பது குறித்து பல கோணங்களில் விசாரணை நடத்தினர். மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் கைப்பற்றி உள்ளனர். இதனை அடுத்து, அந்த கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அசைவ பிரியர்களுக்கு பிடித்த உணவான பிரியாணியால் நடந்த இந்த உயிரிழப்பு அசைவ பிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.