புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த கல்வியாண்டு முதல் 1 முதல் 9 ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசின் இந்த திட்டம் பெற்றோர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மத்தியிலும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து வரும் 2024 – 25 ஆம் கல்வி ஆண்டு முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கும் புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலாகும் என்று பள்ளிக்கல்வித்துறை தற்போது அறிவித்துள்ளது. அனைத்து வகையான நுழைவு தேர்வுகளிலும் சிபிஎஸ்இ தரத்திலான வினாக்கள் கேட்கப்படுவதால் அனைத்து தரப்பு மாணவர்களும் நுழைவு தேர்வுகளில் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்யும் வகையில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.