பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ஏடிஎம், கார்டுகளின் பாஸ்வேர்டாக இது போன்ற எண்களை வைக்க வேண்டாம் என காவல்துறை வாயிலாக பயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போலீஸ் எச்சரிக்கை:
திருவண்ணாமலை மாவட்டம் ஓடலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த, ரேவதி என்ற பெண் கடந்த 30ம் தேதி சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள தன் உறவினர் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்தபடி மற்றொருவர் வீட்டுக்கு செல்ல, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது அந்த ஆட்டோவில் தனது மணிபர்ஸை தொலைத்துள்ளார்.
அவர் அதை தொலைத்த சில மணி நேரத்திலேயே, அவர் ஏடிஎம்மில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணம், 5 தவணையாக எடுக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குறுஞ்செய்தியை வைத்து, வங்கி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி ஏடிஎம் குறித்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்ந்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மணிபர்சை எடுத்த மர்ம நபர், எதேச்சையாக அதில் இருந்த பிறந்த தேதியை வைத்து ஏடிஎம் மூலம் பணத்தை எடுத்திருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால், எளிதில் கண்டறிய கூடிய பிறந்த தேதி, மொபைல் எண்ணின் முதல் மற்றும் கடைசி 4 எண்கள், வாகனத்தின் எண் ஆகியவற்றை பாஸ்வேர்டாக வைக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது போன்ற விஷயங்களில் பொதுமக்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.