வங்கக்கடலில் உருவான மிக்ஜம் புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தது. குறிப்பாக சென்னை மாவட்டமே வெள்ளத்தால் மூழ்கியது. இதன் காரணமாக பொதுமக்கள் பலரும் மிகவும் அவஸ்தைப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல தொண்டு நிறுவனங்கள் நிவாரண பொருட்களை வழங்கி வந்தனர். இந்நிலையில் தமிழக முதல்வர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை வழங்குவதாக அறிவித்தார்.
இதையடுத்து திரையுலகை சேர்ந்த பலரும் முதலமைச்சரின் நிவாரண தொகைக்கு நிதியுதவி வழங்கி வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே வைரமுத்து, நடிகர் சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் நிவாரணம் உதவித்தொகை வழங்கியுள்ளனர். இப்போது இவர்களை தொடர்ந்து நடிகர் சூரி முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார்.