தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் பிரபலமான நடிகர் மன்சூர் அலிகான், தற்போது வேலூர் மக்களவை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக பலாப்பழ சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்த சூழலில் நேற்று (ஏப்ரல் 17) குடியாத்தம் பகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, வீடு திரும்பிய நிலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் குடியாத்தம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் மன்சூர் அலிகான் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது உடல்நலம் சரியாகி வரும் நிலையில் பரபரப்பான குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார். அதாவது “குடியாத்தம் சந்தையில் இருந்து வீடு திரும்பிய போது, கட்டாயப்படுத்தி பழச்சாறு, மோர் கொடுத்தனர். அதை குடித்த சில நிமிடங்களிலேயே மயக்கமும், நெஞ்சு வலியும் ஏற்பட்டது.” என மன்சூர் அலிகான் குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார்.