மகளிர் பிரிமியர் லீக் தொடரின் 2வது சீசன் நேற்று (பிப்ரவரி 23) பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக ஆலிஸ் கேப்ஸி 75 ரன்களுக்கும், ரோட்ரிக்ஸ் 42 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர். இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. இந்த அணியில் களம் இறங்கிய வீரர்கள் டெல்லி அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். ஆனாலும் கடைசி பந்தில் மும்பை அணி வெற்றி பெற 5 ரன் தேவைப்பட்டது. அந்த பந்தில் மும்பை வீராங்கனை சிக்சர் அடிக்க அந்த அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.