தமிழ்நாடு மாநில கல்வித்திட்டத்தில், 2023-24 ஆம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு, கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட நிலையில், இன்று (மே 10) காலை 09.30 மணி அளவில், பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
அதன்படி தேர்வு எழுதிய மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம். அதேபோல் தாங்கள் படித்த பள்ளிகளிலும், பதிவு செய்துள்ள செல்போன் எண்ணில் பெறப்படும் குறுஞ்செய்தி மூலமாகவும் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மொத்தமாக தமிழ்நாட்டில் மாணவிகள் 94.53 சதவீதம், மாணவர்கள் 88.58 சதவீதம் என 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர்.