தமிழகத்தில் ஏற்கனவே 3 அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் தற்போது தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதால் அதிமுக நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
கொரோனா தொற்று:
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. ஆரம்ப காலத்தில் சென்னையில் மட்டுமே அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது பிற மாவட்டங்களிலும் தீவிரமெடுக்கத் தொடங்கி உள்ளதால் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை மின்துறை அமைச்சர் தங்கமணி, உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலின், மகன் மற்றும் மருமகன் ஆகியோர்க்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் தற்போது அமைச்சருக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட காரணத்தால் அமைச்சர் சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து ஆளும்கட்சி எம்எல்ஏ மற்றும் அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதால் கட்சி நிர்வாகம் அதிர்ச்சியில் உள்ளது.