தமிழகத்தில், மதுரை, கும்பகோணம், கோவை, சென்னை, விழுப்புரம், சேலம் கோட்ட அரசு பேருந்துகளில், நாட்டுப்புற கலைஞர்கள் தங்கள் உபகரணங்களை கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.
அரசு பஸ்களில் கட்டணம் இல்லை:
தமிழகத்தில் கடந்த 2 1/2 வருடங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனைத்து தொழில்களும் முடங்கி, மக்கள் வீடுகளிலேயே அடைந்து கிடக்கும் சூழல் நிலவியது. இதனால் திரைத்துறை தொழிலாளிகளும், நாடகக் கலைஞர்களும், நாட்டுப்புற கலைஞர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இருப்பினும் தற்போது தடுப்பு நடவடிக்கைகள் அடிப்படையில் இந்த நிலை சீராகி உள்ளது. இப்படி இருக்க அரசு போக்குவரத்து கழகத்தின் நெல்லை கோட்ட நிர்வாகம் டிரைவர், கண்டக்டர்களுக்கு முக்கிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அந்த அறிக்கையில், முன்னதாக அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில், 50% பயண கட்டண சலுகையுடன் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள நாட்டுப்புற கலைஞர்கள், அரசு பஸ்களில் தொழில் முறையாக பயணம் செய்யும் போது, 50% பயணக் கட்டண சலுகை பெறலாம்.
மேலும் நாட்டுப்புற கலைஞர்கள் தங்கள் உபகரணங்களை (தப்பாட்டம், மாடு, மயில், காவடி, கரக ஆட்டங்கள், பொய்க்கால் குதிரை, கொல்லி கட்டை, நையாண்டி மேளம், நாதஸ்வரம், பம்பை, உறுமி, உடுக்கை, ஆர்மோனியம், தபேலா, மிருதங்கம், தவில் மற்றும் சிறிய அளவிலான கருவிகளையும்) அரசு பேருந்துகளில் கட்டணமின்றி இலவசமாக எடுத்துச் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, நாட்டுப்புற கலைஞர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.