தமிழகத்தில் செயல்பட்டு வரும் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்டக் கல்வி அலுவலர்கள் எச்சரிக்கை விடுக்கும் வகையில் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்த சுற்றறிக்கையில், ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வரும் அரசு பள்ளிகளில் சுமார் 2.5 லட்சம் ஆசிரியர்கள் நிரந்தரமாக பணி புரிந்து வருகின்றனர். இருப்பினும், அரசு பள்ளிகளில் 13 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதனால், பெற்றோர் ஆசிரியர் கழகம் வழியாக தாற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில், பள்ளி தலைமை ஆசிரியர்கள் பலர் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றி வரும் தன்னார்வலர்களை மாணவர்களுக்கு பாடம் எடுக்க வைப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், நிரந்தர ஆசிரியர்கள், தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு பாடங்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் ஆகியோர்கள் மட்டுமே மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என்றும், தன்னார்வலர்கள் பாடம் நடத்தினால் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.