தமிழகத்தில் அமாவாசை, பௌர்ணமி, முக்கிய தினங்கள், வார விடுமுறை உள்ளிட்ட நாட்களின் போது பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக தமிழகத்தின் பல்வேறு பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது வார விடுமுறை மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க இருப்பதாக தமிழக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
அதன்படி சென்னையில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட ஊர்களுக்கு நாளை மறுதினம் கூடுதலாக 810 பேருந்துகளும், 24 (பௌர்ணமி) ஆம் தேதி கூடுதலாக 720 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டின் பிற இடங்களுக்கு கூடுதலாக 200 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதில் குறிப்பாக வண்டலூர் கிளாம்பாக்கத்தில் இருந்து 23ஆம் தேதி 730 பேருந்துகளும், 24 ஆம் தேதி 640 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.