தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்கத் தொகை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குவதற்கான ஏற்பாடுகளை அரசு தீவிரமாக்கி உள்ளது. இதற்காக, ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக நேற்று (ஜனவரி 7) முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து ஜனவரி 10ம் தேதி முதல் ஜனவரி 13 (அல்லது) 14 ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்படவுள்ளது.
இந்நிலையில், பொங்கல் பரிசு வழங்குவது குறித்து உணவு வழங்கல் துறை ஆணையர் ஹர் சஹாய் மீனா, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதாவது,
- குடும்ப அட்டைதாரர்களுக்கு விரல் ரேகை சரிபார்ப்பு வாயிலாக தான் பொருட்கள் விநியோகப் பட வேண்டும் என்றும், ரேகை பதிவு சரிவர இல்லாதவர்களுக்கு கையெழுத்து வாங்கிய பிறகே பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பொங்கல் பரிசு பெற வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களை வரிசையில் நிற்க விடாமல் முன்னுரிமை வழங்க வேண்டும்.
- பரிசுப் பொருட்களை பெற வரும் மக்கள் வெயிலில் நிற்காமல் இருப்பதற்காக சாமியானா பந்தல்கள் ரேஷன் கடைகளில் அமைக்க வேண்டும்.
- கூட்ட நெரிசலை தவிர்க்க போலீஸ் பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.