தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என ஜாக்டோ ஜியோ அமைப்பு நீண்டகாலமாக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இதற்கேற்ப திமுக தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும் என வாக்குறுதி அளித்து இருந்தது.
ஆனால் ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் முடிவடைய உள்ள நிலையிலும் இந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் உள்ளனர். இதையடுத்து நாளை (பிப்.15) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம், பிப்.26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்ள உள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்து இருந்தனர். இதனால் பொதுத்தேர்வு மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், நேற்று (பிப்.13) சென்னை தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதிலும் உடன்பாடு ஏற்படாத காரணத்தால், முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினர். இதன்பின் நாளை அறிவிக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.