நாகை மாவட்டத்தை சேர்ந்த 15 மீனவர்கள் வங்க கடலில் மீன் பிடிக்க சென்ற போது இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதன் பின்னர் மீனவர்கள் பயன்படுத்திய படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து பாமக கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் மத்திய அரசுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில் தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடிக்க உரிமையுள்ள இடத்தில் தான் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
இவர்களை இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும். தமிழக மீனவர்களுக்கான இந்த கொடுமையானது 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. எனவே இந்தியா – இலங்கை அரசுகள் இணைந்து அமைத்துள்ள கூட்டுப் பணி குழுவின் கூட்டத்தில் மீனவர் சிக்கலுக்கான ஆலோசனைகளை நடத்தி நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதற்கான நடவடிக்கைகளை மேலும் தாமதிக்காமல் உடனடியாக அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.