கொரோனா என்னும் கொல்லுயிரி நாட்டையே உலுக்கி வருகிறது. இந்த தொற்றுக்கு தங்களின் மதிப்புமிக்க உயிரை பறிகொடுத்தவர்கள் பலர்.மேலும் இதன் பிடியில் இன்னும் பலர் அகப்பட்டு தான் உள்ளனர். இதை தொடர்ந்து, அதன் பக்கவிளைவாக பல்வேறு வகை புஞ்சை நோய்கள் வேறு தாக்குகின்றன.
இதற்கு தடுப்பூசி ஒன்றையே பேரயுத்தகமாக கருதி அதனை செலுத்தும் பணியானது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரஷ்ய தடுப்பூசியான ‘ஸ்புட்னிக் வி’ தற்போது இந்தியாவில் மேலும் 9 நகரங்களுக்கு கிடைக்கும் என டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று முதல் அலையில் தொடங்கி இரண்டாம் அலை என தனது வீரியத்தை குறைக்காமல் நாடு எங்கும் பரவி கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்த ஆட்டம் எப்பொழுது தான் முடியும் என்று அனைவரும் ஏங்கிக்கொண்டு இருக்கின்றனர். இந்த தொற்றை கட்டுப்படுத்த அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் வருகிறது.
அந்த வகையில் மருத்துவ நிபுணர்கள் முதல் அனைவரும் குறிப்பிடுவது தடுப்பூசி ஒன்றையே. அதன் காரணமாக அரசு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் போன்ற தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தி வருகிறது. இந்த தடுப்பூசிகள் பற்றிய தவறான வதந்திகள் முன்பு இருந்தாலும் இப்பொழுது மக்கள் ஆர்வத்துடன் அதை செலுத்தி வருகின்றனர்.
இதனால், தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. இதை போக்க மூன்றாவதாக ரஷ்ய தடுப்பூசியான ‘ஸ்புட்னிக் வி’,இறக்குமதி செய்யவும் மற்றும் இந்தியாவில் தயாரிக்கவும் சமீபத்தில் டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. இதன் அடிப்படையில் ஐதராபாத்தில் மட்டும் ஸ்புட்னிக் வி தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தது. இதை தொடர்ந்து தற்போது சென்னை, டெல்லி, விசாகப்பட்டினம், பெங்களூரு, மும்பை உட்பட 9 முக்கிய நகரங்களுக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்து உள்ளது.மேலும் இந்த நகரங்களில் உள்ள ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் மட்டும் செலுத்தப்பட்டு வருகிறது. இது குறைந்த அளவிலேயே கையிருப்பு இருப்பதால் கோவின் இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ள முடியாது என டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.