தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பலரும் பழைய ஓய்வூதிய திட்டம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அவ்வப்போது போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் ‘சம வேலைக்கு சம உரிமை’ என்ற கோரிக்கை வலியுறுத்தி, கடந்த பிப்ரவரி 19 முதல் மார்ச் 8ஆம் தேதி வரை 19 நாட்களுக்கு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொண்ட, வடமதுரை ஒன்றிய ஆசிரியர்களுக்கு, போராட்டம் நடத்திய 19 நாட்களுக்கு சம்பளமில்லா விடுப்பாக பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என வட்டார கல்வி அலுவலர் உத்தரவிட்டு ருந்தார். மேலும் ஊதியம் மட்டுமல்லாமல் பிற படிகளையும், ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் அறிவுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு, ஊதியம் பிடித்தம் செய்யப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் ஊதிய பிடித்தம் செய்ய உத்தரவிட்ட அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.