கொரோனா நோயாளிகளுக்கு புகை பாதிப்பை தரும் என்பதால், தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு விற்பனை, பட்டாசு வெடிப்பது தடை செய்யப்படும் என ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது. திருமணம் உள்ளிட்ட மற்ற நிகழ்ச்சியிலும் பட்டாசு வெடிக்கக்கூடாது.
‘லைசென்ஸ்’ ரத்து
நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல், கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் பின், படிப்படியாக தளர்வுகளுடன் ஒவ்வொரு மாநிலங்களும் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில், அசோக் கெலாட் தலைமையிலான, ராஜஸ்தான் அரசு நவம்பர் மாதத்திற்கான தளர்வு குறித்து அறிவித்துள்ளது. இதில்,’ வரும் 16ம் தேதி வரை கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். நீச்சல் குளம், திரை அரங்கம் திறக்க வரும் 30ம் தேதி வரை தடை தொடரும். திருமண விழாக்களில் அதிகபட்சமாக 100 பேர் பங்கேற்கலாம்.
பட்டாசு வெடிக்கும் போது, ஏற்படும் புகையால் கொரோனா, இருதய நோயாளிகள் பாதிக்கப்படுவர். இதனால், தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுகிறது. திருமணம் உள்ளிட்ட மற்ற நிகழ்ச்சியிலும் பட்டாசு வெடிக்கக்கூடாது. பட்டாசு விற்பனைக்கு வழங்கப்பட்ட, தற்காலிக ‘லைசென்ஸ்’ ரத்து செய்யப்படும். புதிதாக தேர்வான 2,000 மருத்துவர்கள், அடுத்த 10 நாட்களில் பணியமர்த்தப்படுவர்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.