தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு விற்க, வெடிக்க ஒடிசா மாநில அரசு தடை விதித்துள்ளது. சுவாசப்பிரச்சனை, கொரோனா நோயாளிகளை காக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மீறுபவர்களுக்கு தண்டனை
கொரோனா பரவலை அடுத்து, இந்தியா முழுவதும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டன. தற்போது, பல தளர்வுகள் அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில், ஒடிசா மாநில அரசு தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு விற்க, வெடிக்க தடை விதித்துள்ளது. இது குறித்து ஒடிசா மாநில பேரிடர் மேலாண்மை மையம் வெளியிட்ட அறிக்கையில்,’ கொரோனா தொற்றின் தீவிரம் இன்னும் குறையவில்லை.
மழைக்காலம் துவங்கி உள்ளதால் குழந்தைகள், சுவாசப்பிரச்சனை, கொரோனா நோயாளிகள் புகை மாசுபாடு காரணமாக பாதிக்கப்படுவர். இதனால், நவம்பர் 10 முதல் 30 வரை (நவம்பர் 14, தீபாவளி) பட்டாசு விற்க, வெடிக்க தடை விதிக்கப்படுகிறது. இதை மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ராஜஸ்தான் அரசு தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க தடை விதித்தது. இந்நிலையில், ஒடிசா அரசும் தடை விதித்துள்ளது, பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.