கன்னியாகுமாரி மாவட்டம், நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள “ட்ரிஸில் பிரிஸ்டோ ஹோட்டல் உரிமையாளர் கார்த்திக்” என்பவரது மூன்று லட்சம் ரூபாய் பயணத்தை நான்கு கொள்ளையர்கள் கார் கண்ணாடியை உடைத்து திருடி சென்றனர். போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துகொண்டு வருகின்றனர்.
மூன்று லட்சம் ரூபாய் கொள்ளை:
நாகர் கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ட்ரிஸில் பிரிஸ்டோ ஹோட்டல் உரிமையாளர் கார்த்திக் என்பவர் நேற்று இரவு காரில் வந்துள்ளார். காரை தனது ஹோட்டலுக்கு முன் நிறுத்திவிட்டு அன்றைய கணக்கு வழக்குகளை முடிப்பதற்காக தன் அறைக்கு சென்றுவிட்டார்.
அப்பொழுது, ஹோட்டல் முன் நின்றிருந்த காவலாளியிடம் இரண்டு பேர் வந்து பேச்சு கொடுப்பது போல் பேசிக்கொண்டே அவரை அங்கிருந்து தனியாக அழைத்து சென்றுவிட்டனர். மற்றொரு நபர் அங்கும் இங்கும் பார்த்தபடி, யாரேனும் வருகிறார்களா என்று நோட்டம்விட்டு கொண்டிருந்திருக்கிறார். ஒருவர் கார் அருகில் சென்று கார் கண்ணாடி மீது ஸ்ப்ரே அடித்துவிட்டு கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த மூன்று லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து விட்டார்.
கார் கண்ணாடியை உடைக்கும் போது, காரின் அலாரம் சத்தம் கேட்டதும் ஹோட்டல் உரிமையாளர் கார்த்திக் மற்றும் ஊழியர்கள் வேகமாக வெளியே ஒடி வந்து பார்ப்பதற்குள் திருடர்கள் பணத்தை எடுத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் வேகமாக ஓடிவிட்டனர். நடந்த சம்பவத்தை பார்க்கும் பொழுது அந்த நான்கு திருடர்களும் திட்டமிட்டு கார்த்திக் என்பவரது காரை பின் தொடர்ந்து வந்திருப்பார்கள் என்பது போல் தெரிகிறது.
தனது பணம் பறிபோனதை தொடர்ந்து ஹோட்டல் உரிமையாளர் கார்த்திக், வடசேரியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். கொள்ளை நடந்த பகுதிகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து போலீசார் திருடர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.